பெங்களூரு: மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையை கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரை கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனிடையே கர்நாடகாவில் அரசியல் சூழல் காரணமாக எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பொறுப்பேற்றார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்; மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.
அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அனுமதி பெறுவோம் என கூறினார். புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.