கோவில்பட்டி: மக்களால் புறக்கணிக்கப்பட்ட டிடிவி தினகரன் அதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்து நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரு தேர்தலை சந்தித்தார். ஒரு தேர்தலில் கூட அவருடை கட்சி வெற்றி பெறவில்லை. மக்களே அவர்களை புறக்கணித்துள்ளனர். நிராகரித்துள்ளனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட டிடிவி தினகரன், அதிமுக பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமையில்லை. எந்த அருகதையும் இல்லை,என்றார்.