கிராமப்புறங்களில் ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்க!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

சென்னை: கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக்கோரி Citizen consumer and civic Action Group என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பெற்றோர்கள் பொருளாதார பாதிப்பு காரணமாக அவற்றை விற்று விடுவதாகவும் தெரிவித்தார். மேலும் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து அவற்றின் மூலமாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த யோசனை குறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாலும், 3வது அலை தாக்கும் என்பதற்கான அறிவியல் பூர்வ கணிப்பு இல்லாத காரணத்தினால் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சத்துணவு மாணவர்களுக்காக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு சத்துணவு சென்று சேர்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: