கையடக்க CPU-ஐ உருவாக்கிய மாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.: மாதவின் உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் அரசு உதவி செய்யும் என உறுதி

சென்னை: கையடக்க கணினியை செயலாக்க கருவியை உருவாக்கிய மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்வருமாறு காண்போம்;  கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை உருவாக்கிய

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி செல்வன் எஸ்.எஸ். மாதவ் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் எஸ்.எஸ். மாதவ் அவர்கள் சந்தித்து, தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை (cpu) காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளார்.  

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன்  செல்வன் எஸ்.எஸ். மாதவ், ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கணினி மொழிகளான java, python, c , c ++, kotlin ஆகியவற்றை படித்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க mini cpu கண்டுபிடித்து உள்ளதாகவும், இதற்காக இரண்டு ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து இம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனை கேள்விப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர், செல்வன் எஸ்.எஸ். மாதவ்-யை நேரில் அழைத்து பாராட்டினார். இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte india cpu manufacturing company என்ற நிறுவனத்தினை தொடங்கி, இணையதளம் (online) மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலை கேட்டறிந்த முதலமைச்சர் அந்த மாணவனை வாழ்த்தினார்.

மேலும் செல்வன் எஸ்.எஸ். மாதவ் அவர்களின் கண்டுபிடிப்பினை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது, செல்வன் எஸ்.எஸ். மாதவ் அவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: