சென்னை: போடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிட்டார்.
ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் களமிறக்கப்பட்டார். தேர்தலில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் 11,055 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போடி தொகுதி உள்ள வாக்காளர் மிலானி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்;- அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். அவரது மனைவி விஜயலட்சுமி பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்த சொத்தின் மதிப்பை ஓ.பன்னீர்செல்வம் குறைத்து கூறியுள்ளார். ஏனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், சொத்தின் மதிப்பு குறித்து காட்டப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 9 -ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.