ஊத்துக்கோட்டை: தொடர் மழையால் ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் திடீர் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் பரவாலக பெய்து வருகிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக நந்தனம், சின்னாப்பட்டு மலைப்பகுதி மற்றும் ஆரணியாற்றின் கரையோரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து நீர் தேங்கியது. தொடர்ந்து, இந்த மழைநீர் ஆரணியாற்றில் பாய்ந்து, சுருட்டபள்ளி அணையை வந்தடைந்தது. பின்னர், ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் மழைநீர் ஓடியது. தொடர்ந்து மழை பெய்தால் ஆற்றில் தண்ணீர் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை வரவில்லை என்றால் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும். தற்போது, ஆற்றில் லேசான அளவே தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.