நூதன முறையில் வீட்டில் திருட்டு

திருப்போரூர்: திருப்போரூர் வணிகர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு(55). தனியார் நிறுவன அதிகாரி. இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி அஞ்சனம்மா(30), மகள்கள் உமாஜோதி(30), யசோதா(28) ஆகியோர் மட்டும் இருந்தனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் வீட்டிற்கு வந்த மர்ம நபர், `திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டது. இதனால் வீடுகளில் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு உதவ வந்துள்ளேன்,’ என்று கூறியுள்ளார். பின்னர் மூவரையும் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துசென்று டிஷ் ஆன்டனாவை பிடித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அந்த நபரின் பேச்சைக் கேட்டு மூவரும் டிஷ் ஆன்டனாவை பிடித்துக் கொண்டனர். அப்போது அந்த நபர் நான் வீட்டின் உள்ளே சென்று குரல் கொடுத்தவுடன் கீழே வருமாறு கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் குரல் வராததால் அந்த நபரைத் தேடி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ஒரு லேப்டாப் மற்றும் 3 செல்போன்களை அவர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

Related Stories: