வெள்ளம், காட்டுத் தீயை தொடர்ந்து திடீரென தாக்கிய புழுதிப்புயல் 22 வாகனங்கள் மோதி விபத்து: அமெரிக்காவில் 8 பேர் பலி

கனோஷ்: அமெரிக்காவில் காட்டுத்தீ, மழை, புயல் போன்றவை வரிசையாக தாக்கி வருகின்றன. ஏற்கனவே இந்த நாடு, கொரோனா வைரசாலும் உலகிலேயே மிக அதிகப்பட்ச பலி, பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த தொல்லைகள் போதாது என்று நேற்று இந்நாட்டில் புழுதிப் புயலும் தாக்கியது. கனோஷ் நகரில் நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர புழுதி புயல் வீசியது. இதன் காரணமாக சாலையில் எதிரே வாகனங்கள் தெரியாத அளவிற்கு வாகனங்களின் முகப்பு கண்ணாடிகள் புழுதியால் மூடின. இதனால், வாகன ஓட்டிகள் நிலைகுலைந்தனர்.

ஓட்டுனர்கள் கட்டுப்பாட்டை இழந்த 22 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின்  மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதில், 5 பேர் ஒரே வாகனத்தில் இருந்தவர்கள். பலியான மற்ற 3 பேர் வேறு வாகனங்களில் இருந்தவர்கள். இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர். இவர்கள் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த 10 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories: