புதுடெல்லி: அசாம் - மிசோரம் மாநில எல்லையில் நேற்று முன்தினம் நடந்த மோதலில், அசாம் போலீசார் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களின் வாழ்க்கையில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டை மீண்டும் தோல்வியுற செய்து விட்டார். இந்தியா இப்போது அதன் பயங்கரமான விளைவுகளை அறுவடை செய்து வருகின்றது,’ என பதிவிட்டுள்ளார்.