ஜெயலலிதா தோற்றிருந்தால் 300 பேர் தற்கொலை செய்திருப்பார்கள் அதிமுக தோல்வியடைந்ததில் யாரும் வருத்தப்படவில்லை: மாஜி அமைச்சர் அன்வர் ராஜா பரபரப்பு பேச்சு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அன்வர் ராஜா பேசுகையில், ‘‘ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகளை தவிர்த்து, கிராம மக்கள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது, அதிமுகவினர் ஜெயலலிதா  பெயரை சொல்கிறார்களா? எம்ஜிஆர் பெயரை சொல்கிறார்களா என்றுதான் கவனிப்பார்கள். நீங்கள் அதை சொல்லாமல் மறைத்தால் அவர்கள் உங்களை மறந்து விடுவார்கள். நடந்து முடிந்த தேர்தலில் பல இடங்களில் அதுதான் நடந்துள்ளது. ஆனாலும் இத்தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம். ஜெயலலிதா இருந்தபோதும் நாம் தோற்று இருக்கிறோம்.

ஜெயலலிதா இருந்தபோது 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்தோம். ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்றபோது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்து சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் மட்டுமே  வெற்றி பெற்று, ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்திருப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது குறித்து யாரும் வருத்தப்படவில்லை. யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறார்களா?’’ என்றார்.

ஏற்கனவே அதிருப்தி தலை தூக்கும் நேரத்தில் மாஜி அமைச்சரின் சர்ச்சை பேச்சு, அதிமுக கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லூர் ராஜூ கண்டனம்: மதுரையில் நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில்,  அன்வர்ராஜா பேசியது தவறான கருத்து. தோல்வி எதிர்பாராதது. தோல்விக்கு தோழமை கட்சிகள் காரணம் அல்ல என்றார்.

Related Stories: