சென்னை: போலி பத்திரம் எழுதும் ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சாந்தோம் அலுவலகத்தில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில், அமைச்சர் மூர்த்தி தலைமையில் தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, தலைவர் சிவன் அருள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் முறையாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா, எந்தெந்த அலுவலகங்களில் பத்திரங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது, கடந்த காலங்களில் என்னென்ன தவறுகள் நடந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். அதேநேரத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்யக்கூடிய ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.