மனைவி முகத்தை பிளேடால் கிழித்த கணவன் கைது

அண்ணாநகர்: புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவரது மனைவி ரோஸி (46), தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அண்ணாமலை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை ரோஸி கண்டித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து, வேப்பேரி காவல் நிலையத்தில் ரோஸி பலமுறை புகார் அளித்தும், குடும்பத்தகராறு என போலீசார் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி கம்பெனியில் வேலை முடிந்து ரோஸி  வீட்டிற்கு நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த அண்ணாமலை தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த பிளேடால் அவரின் முகத்தை கிழித்துள்ளார். இதில், படுகாயமடைந்த ரோஸி அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த அண்ணாமலை அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், ரோஸியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்த புகாரின் பேரில், அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைந்தகரை மேம்பாலத்தின் கீழ் பதுங்கியிருந்த அண்ணாமலையை நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: