தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி கோரிக்கை அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க உத்தரவிடக்கோரி, தோழர் சட்ட மையத்தை சேர்ந்த வக்கீல் பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், தூய்மை  பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும் போது மரணம் அடைய வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இது சம்பந்தமாக அனுப்பிய மனுவை பரிசீலித்த மத்திய அரசு கோரிக்கையை பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழக நகராட்சி நிர்வாகம் ஆணையருக்கு பரிந்துரைத்தது. ஆனால் அதன் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், நிரந்தர பணியாளர்களைப்போல தங்களுக்கும் இடர்படி வழங்க கோருகிறார்கள். அரசு பணியாளர்களுக்கு அரசு தரப்பில் இடர்படி தரப்படுகிறது. ஒப்பந்த பணியாளர்கள் இடர்படி கோர உரிமையில்லை. அதேநேரத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 2  வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: