கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பள்ளி மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

கடலூர்: பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள செம்பலக்குறிச்சியைச் சேர்ந்தவர் மகாதேவன் மகன் விஜயன் (24). அருகில் உள்ள பெரிய கண்டியங்குப்பத்தில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து சென்ற 12ம் வகுப்பு மாணவியுடன் விஜயன் பழகி வந்துள்ளார். இதில், அவரை தனியாக அழைத்துச் சென்று இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

எனவே, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாணவி கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு, விஜயன் குடும்பத்தினரும் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

இதுகுறித்து, அந்த மாணவி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 27-8-2017 அன்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிந்து நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். இதில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விஜயனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: