விஸ்வரூபமெடுக்கும் ஆவின் விவகாரம்!: ரூ.5.93 கோடிக்கு முக்கிய கோப்புகள் மாயம்...2018-19ம் ஆண்டில் 10 கோடிக்கு விளம்பரங்களில் முறைகேடு..!!

சென்னை: ஆவின் நிறுவன முறைகேட்டை அம்பலப்படுத்திய முக்கிய கோப்புகள் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மாயமான கோப்புகள் அனைத்திலும் நிதி இழப்பு தொடர்பான ஆவணங்கள் அடங்கியிருந்தன. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பல்வேறு முறைகேடுகள் செய்தார் என்பது புகார். அவர் மீது பால் கொள்முதல் முதல் விற்பனை வரை பல மட்டங்களிலும் சுமார் 300 கோடிக்கும் மேலாக ஊழல் செய்திருப்பதாக பால் முகவர்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைப்பட்டுள்ளன.

இதுகுறித்து தற்போதைய திமுக ஆட்சியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஆவினில் கடந்த 2018 - 19ம் ஆண்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான முக்கிய கோப்புகள் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2018 - 19ல் ஆவினில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தணிக்கையில் போது பல்வேறு தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் மீது விசாரணை நடத்த அதிகாரி அலெக்ஸ் ஜீவதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் தன்னுடைய அறிக்கையை தற்போது ஆவின் நிர்வாகத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அதில், பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக  2018 - 19ல் அனுமதிக்கப்பட்ட விளம்பரம் செலவு ரூ.5.63 கோடிக்கு பதில் ரூ.10.37 கோடி செலவிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி கூறியிருக்கின்றனர். அச்சமயம் ரூ.4.4 கோடி செலவினத்துக்கான 78 கோப்புகள் மட்டுமே விசாரணை குழு முன்பு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எஞ்சிய ரூ.5.93 கோடி செலவினத்துக்கான கோப்புகள் அழிக்கப்பட்டோ, தொலைக்கப்பட்டோ இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாயமான கோப்புகளில் முறைகேடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது ஆவின் நிறுவன முறைகேட்டை அம்பலப்படுத்திய முக்கிய கோப்புகள் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தணிக்கைக்குழு சுட்டிக்காட்டிய நிதி இழப்பு குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது கோப்புகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நிதி இழப்பை ஏற்படுத்திய விற்பனை பிரிவு அதிகாரிகள் பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கிறது. கே.பிரமிளா, இயக்குநர், பால் கூட்டுறவு தணிக்கைத்துறை. ஆ.லோகநாதன், மண்டல துணை இயக்குநர், சென்னை. எம்.ரூஷ்யாராணி, தணிக்கையாளர். ஏ.ஜெயபாலன், துணைப்பதிவாளர். ஆர்.சந்திரசேகரன், துணைப்பதிவாளர் ஆகிய 6 அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அபராதம் வசூலிக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: