கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 38,000 கன அடியாக அதிகரிப்பு.. காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி நீர் திறப்பு

பிலிகுண்டுலு: கர்நாடக அணைகளில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 38,000 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 28,608 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 13,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 27,220 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

கே.ஆர்.எஸ்.மற்றும் கபினி அணைகளில் இருந்து நேற்று 36,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று இரு அணைகளில் இருந்து நீர்திறப்பு 38,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து ஏற்கனவே 36,000 கன அடி திறந்து விடப்பட்ட நீரானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு 28,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து இன்று 38,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளததால், அடுத்து சில நாட்களில் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 34,141 கன அடியாக உள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75.34 அடியில் இருந்து 77.43 அடியாக உயர்ந்து உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories: