சென்னை: தமிழகத்தில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நாடு முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.
மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும், தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் பயன் மற்றும் அதனால் ஏற்படும் நன்மை உள்ளிட்ட தடுப்பூசி தொடர்பான அனைத்து தகவல்களையும் கர்ப்பிணிகளுக்கு கவுன்சிலிங் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறி இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முதல் டோஸை 10,7,527 கர்ப்பிணி பெண்களும், இரண்டு டோஸ்களையும் 346 கர்ப்பிணிகளும் போட்டுகொண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை 1,07,838 கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.