ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் `வென்று வா வீரர்களே’ என்ற பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றியுள்ள `வென்று வா வீரர்களே’ என்ற பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 16ம் தேதி காணொலிக் காட்சி மூலமாக பேசும்போது, “இந்த அரசு விளையாட்டு துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் பெற எனது வாழ்த்துகள்” என்று உற்சாகப்படுத்தி வாழ்த்தினார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று தலைமை செயலகத்தில், டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நம் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகத்தால் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றி இசை அமைக்கப்பட்ட ‘‘வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது, பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர்  அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர்  ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆதவ் அர்ஜூன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: