தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது: நடப்பு மாதத்தில் இதுவரை 1.22 லட்சம் பதிவு; போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டதையடுத்து, புதிய வாகனங்களின் விற்பனை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. இதன்விளைவாக நடப்பு மாதத்தில் மட்டும் நேற்று வரை 1.22 லட்சம் வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகங்களில் புதிதாக பதிவாகியுள்ளது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நாளுக்குநாள் புதிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2,84,47,684 வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

இருப்பினும் வாகனங்களின் மீதான மோகம், மக்களிடத்தில் குறையவில்லை. இதன்விளைவாக புதிய வாகனங்களை பலரும் நாள்தோறும் வாங்கி வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மாதந்தோறும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு வந்தன. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத்தொடங்கியது. அதனால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் மூலம் அத்தியாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் வருவது தடுக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் இயங்கவில்லை. பிறகு கொரோனா பரவல் மெல்லமெல்ல குறையத்தொடங்கியது. மருத்துவமனைகளில் உயர்தரமான சிகிச்சை வழங்கப்பட்டதால், அங்கிருந்த பலரும் நலமடைந்தனர். இதையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை வழங்கியது. இதன் அடிப்படையில் புதிய வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் மீண்டும் இயங்கத்தொடங்கின.

முதலில் குறைவான அளவு மக்களே புதிய வாகனங்களை வாங்கினர். பிறகு இம்மாதத்தின் தொடக்கம் முதல் புதிய வாகனங்களின் விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் நேற்று (26-7-21) வரையில், தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் 1,22,770 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடப்பாண்டில் 8,55,323 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கொரோனா பரவல் அதிகமாக இருந்த மே மாதத்தில் 23,190 வாகனங்களும், ஜூன் மாதத்தில் 56,477 வாகனங்களும் புதிதாக பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

நடப்பாண்டில் வாகன விற்பனை

மாதம்    வாகன விற்பனை

ஜனவரி    1,54,963

பிப்ரவரி    1,83,291

மார்ச்    1,77,789           

ஏப்ரல்    1,36,843

மே    23,190

ஜூன்    56,477

ஜூலை    1,22,770    

மொத்தம்    8,55,323

* ‘ஆடி’ ஆபர்

எப்போதும் ஆடி மாதத்தில் புதிய வாகனங்களை வாங்குவோருக்கும், புத்தாடைகளை வாங்குவோருக்கும் சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக இத்தகைய கடைகள் இரண்டு மாதங்களாக இயங்காமல் இருந்தது. பிறகு தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தான், அவை மீண்டும் செயல்படுகின்றன. இதன்காரணமாக வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் முந்தைய ஆண்டுகளை விட பல்வேறு சலுகைகளை கூடுதலாக விற்பனை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றில் வாகன விற்பனை ஷோரூம்களும் அடங்கும். இதன் காரணமாக தமிழகத்தில் புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: