டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் 2 பேருக்கு அரசு பணி: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பத்திரிகையாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். 200 நாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் சிறப்பான முறையில் போட்டிகளில் பங்கேற்று வருவதாக கூறினார். தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும், சர்வதேச அளவில் தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியாவின் சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்கள், வீராங்கனைகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Related Stories: