உட்கட்சி பூசல், பதவி போட்டி, சசிகலா விவகாரம் விஸ்வரூபம் எதிரொலி மோடியுடன் ஓபிஎஸ், இபிஎஸ் திடீர் சந்திப்பு: 40 நிமிடம் பேசியதின் ரகசியம் என்ன? பரபரப்பு தகவல்கள்

சென்னை: டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினர். உட்கட்சி பூசல், பதவி போட்டி, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.50 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 11.10 மணியளவில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தனர். அங்குள்ள, பிரதமர் மோடி அலுவலகத்தில் பிரதமர் மோடியை மட்டும் தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம் நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரம், உள்ளாட்சி தேர்தல், ஒன்றிய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26  இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதால் மற்ற முன்னாள் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என்ற சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக, மாநில பாஜ தலைமை டெல்லி மேலிடத்திற்கு புகார் தெரிவித்துள்ளது. அதன்பேரிலேயே, இருவரையும் நேற்று டெல்லிக்கு பிரதமர் வரவழைத்து தனியாக 40 நிமிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

* பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுத்தால் தமிழகத்தில் டெல்டா பகுதிகள் பாலைவனம் ஆகிவிடும் என்று கூறியுள்ளோம். இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப பெற்று தர வேண்டும் என கோரியுள்ளோம். எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் லாட்டரி விற்பனையை திமுக மீண்டும் கொண்டு வருகிறது என அறிக்கை விட்டோம். ஆனால் இப்போது அவர்கள் கொண்டு வரவில்லை என தெரிவித்து விட்டார்கள். திமுக இப்போது தான் ஆட்சிக்கு வந்து உள்ளது. அதனால் இப்போதைக்கு கருத்து சொல்ல இயலாது. இவ்வாறு அவர் கூறினார். சசிகலா ஆடியோ தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Related Stories: