குடிபோதையில் தொல்லை கொடுத்ததால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது: காஞ்சிபுரத்தில் பயங்கரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்த மனைவியை கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ்கதிர்பூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (35). லாரி டிரைவர். இவரின் மனைவி அர்ச்சனா (32). இரண்டு மகன்கள் உள்ளனர். தினமும் குடித்துவிட்டுவந்து கங்காதரன், மனைவிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பது கிடையாது என்று தெரிகிறது.

இதனால் குடும்பம் நடத்த முடியாமல் அர்ச்சனா,  குழந்தைகளுடன் தவித்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை குடும்ப பிரச்னை தொடர்பாக மீண்டும் குடிபோதையில் வந்து தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சனா, வீட்டில் உள்ள பெரிய கட்டையை எடுத்துவந்து கணவன், கங்காதரனை சரமாரி தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்த கங்காதரனை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கங்காதரன் இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் சென்று விசாரித்தனர்.

பின்னர் அர்ச்சனாவை கைது செய்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். அங்குவைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையில் கணவனை மனைவியே உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: