நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன்; ஆனால் வெற்றி பெற முடியவில்லை: மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. இந்திய வீராங்கனை பவானி தேவி உருக்கம்

டோக்கியோ: நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன்; ஆனால் வெற்றி பெற முடியவில்லை என இந்திய வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் மகளிர் வாள் வீச்சு சேபர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் டுனிசியா வீராங்கனை பென் அசீஸை 15-3 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வீழ்த்தி, இந்திய வீராங்கனை பவானி தேவி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று காலை நடந்த 2வது சுற்றுப் போட்டியில் பவானி தேவியும், வாள் வீச்சில் உலக தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மானென் புருனெட்டும் மோதினர். தர வரிசையில் பவானி தேவி, தற்போது 36வது இடத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் துவக்கம் முதலே, புருனெட்டை எதிர்கொள்ள முடியாமல் பவானி தடுமாறினார்.  துவக்கத்தில் 2-8 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய புருனெட், இறுதியில் 15-7 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவியை வீழ்த்தி, இப்போட்டியில் வெற்றி பெற்றார். இதுகுறித்து பவானி தேவி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்றேன். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனையானேன்.

எனது இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லா முடிவுகளுக்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது. நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து பிரான்ஸில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன். அடுத்த ஒலிம்பிக்கில் கூடுதல் வலியுடன் வருவேன். எனது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: