சென்னை: ஆசிரியர்களுக்கான இணையவழி அடிப்படை பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இணையதள கணினி வழி அடிப்படை பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடத்தப்படுகிறது என கூறினார். 75,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என பேட்டியளித்தார். 2.04 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் எனவும் கூறினார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சி அமைத்தது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அன்பில் மகேஷ் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஒரு காரணமாக இருந்தாலும், கொரோனா பேரிடர் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டதே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த திமுக தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசியர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்து இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஆசிரியர்களுக்கான இணையதள கணினிவழி அடிப்படை பயிற்சி வகுப்பு 5 நாட்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.