தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் வருகிற புதன்கிழமை முதல்வர் துவக்கி வைப்பார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வருகிற புதன்கிழமை முதல்வர் துவக்கி வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞரின் பிறந்தாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் பங்களிப்பில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்கவிருக்கிறது. இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சியாக இது அமையும். அதன்படி வருகிற புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் சிஎஸ்ஆர் நிதியில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் நேரடியாக வந்து இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஆழ்வார்பேட்டை பொதுமக்கள் இதன்மூலம் தனியார் மருத்துவமனையில் போடப்படும் இலவச தடுப்பூசி திட்டத்தில் பயனடைய இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் வருகிற வியாழக்கிழமை முதல் தொடரப்பட உள்ளது.

எந்த நிறுவனத்தின் சிஎஸ்ஆர் எந்த மருத்துவமனையுடன் இணைந்துள்ளது, இதன்மூலம் எத்தனை பேருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள் ஒவ்வொரு மருத்துவமனையின் வளாகத்திலும் வைக்கப்பட்டு அந்தபகுதி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கப்படும். பல்வேறு தொழில்நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அந்த பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் 25% கோட்டாவை பயன்படுத்தி கொள்ள இருக்கிறார்கள். திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து மருத்துவமனைகள் சார்பில் 107 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து 137 மருத்துவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பெரும்பாலான மருத்துவமனைகள் சிஎஸ்ஆர் உடன் இணைந்து இந்த திட்டத்தை உடனடியாக துவக்க இருக்கிறார்கள். மேலும் மருத்துவமனைகள் மற்றும் சிஎஸ்ஆர் ஒருங்கிணைப்பு பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.

Related Stories: