சோழவந்தான் அருகே சூறாவளியால் நாசம்: வாழை சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு..!

சோழவந்தான்: சோழவந்தான் அருகே, சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் தென்னை, வாழை சாகுபடி நாசமடைந்தன. இது குறித்து கலெக்டர், எம்.எல்.ஏ வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் பகுதியில் சில தினங்களுக்கு முன் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழை, தென்னை, வெற்றிலைக் கொடிக்கால், வீடுகள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், விளைநிலங்களில் சூறாவளியால் ஏற்பட்ட சாகுபடி பாதிப்பு குறித்து கலெக்டர் அனிஷ் சேகர், எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதையடுத்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அறிவுறுத்தினர். ஆய்வின்போது தாசில்தார் நவநீதகிருஷ்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தின கலாவதி, பாண்டியன், ஊராட்சி தலைவர் பவுன் முருகன், துணைத்தலைவர் பாக்கியம் செல்வம், விவசாய அணி முருகன், இளைஞரணி வெற்றிச்செல்வன், நிர்வாகிகள் திருமுருகன், வீரபாண்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முன்னதாக சோழவந்தானில் ரயில்வே மேம்பாலப் பணிகளை கலெக்டர், எம்.எல்.ஏ வெங்கடேஷன் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.

Related Stories: