×

செயற்கை மணல் தயாரிப்பு, விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த புதிய கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கனிம நிறுவன அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை  செயலாளர் முருகானந்தம், தொழில்துறை சிறப்பு  செயலாளர் லில்லி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை  இயக்குநர் நிர்மல் ராஜ், தமிழ்நாடு மேக்னசைட்  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கதிவரன், தமிழ்நாடு கனிம  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிருந்தா தேவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்க பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்க கொள்கையை உருவாக்க வேண்டும். செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். கனிம வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத குவாரிகளை கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில் அந்த குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் 2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரப் படிமங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர்,  அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிர் படிமங்கள் ஆகியவற்றை பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு கனிம நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.250 கோடி அளவிற்கு வருவாயை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கு உரிய தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரக்கோணம் அருகில் செயற்கை மணலை தயாரிக்க புதிய உற்பத்தி பிரிவு தொடங்குவதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சுரங்க பகுதிகளை அடுத்த மூன்று வருடத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, உலகத்தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,MK Stalin , Artificial sand, sales, regulation, policy, Chief MK Stalin
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...