×

சூதாட்டத்தில் வென்று நண்பர்களுடன் திரும்பியபோது போலீஸ் உடையில் காரை வழிமறித்து பைனான்சியரிடம் ரூ.25 லட்சம் கொள்ளை: லத்தி, ஆயுதங்களால் தாக்கிய 4 பேருக்கு வலைவீச்சு

வாணியம்பாடி: சூதாட்டத்தில் வென்று நண்பர்களுடன் திரும்பிய பைனான்சியர் காரை போலீஸ் உடையில் வந்து வழிமறித்து தாக்கி ரூ.25 லட்சத்தை பறித்து சென்ற 4 பேர் கும்பலை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் ஞானசேகரன் (45), பைனான்ஸ் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், குடியாத்தம் பகுதியில் இருந்து நண்பர்கள் பாலாஜி, சிவகுமார் ஆகியோருடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலத்தில் சென்றபோது, இவரது காரை பின்னால் வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட கார் திடீரென வழிமறித்து நின்றது.

அதில் இருந்து போலீஸ் உடையுடன் இறங்கிய 4 பேர் கும்பல், லத்தியாலும், ஆயுதங்களாலும் ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கி, காரில் இருந்த ரூ.25 லட்சத்தை பறித்தது. அப்போது ஞானசேகரனின் நண்பர், கும்பல் வந்த காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்தில் இருந்து கீழே வீசிவிட்டார். இதனால் காரை நிறுத்திவிட்டு பணத்துடன் கும்பல் தப்பியது.இது குறித்து ஞானசேகரன் வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து எஸ்பி சி.பி. சக்கரவர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். கொள்ளையரின் காரில் இருந்து பான்கார்டு, ஆதார் அட்டைகள் மற்றும் போலீஸ் தொப்பி மற்றும் ‘‘பிரஸ்’’ என்ற அடையாள அட்டைளை போலீசார் கைப்பற்றினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குணசேகரன் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.25 லட்சத்தை வென்று காரில் திரும்பி கொண்டிருந்தபோது, சூதாட்டத்தில் தோற்றவர்கள் போலீஸ் உடையில் வந்து இவர்களை தாக்கி கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையரை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். பேரணாம்பட்டு பகுதியில் சூதாட்டம் நடப்பதை உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்காத இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் எஸ்.பி. செல்வகுமார் நேற்று உத்தரவிட்டார்.

Tags : Gambling, police uniform, financier, robbery
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...