×

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 194 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர் காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கடந்த 23ம் தேதி வரையில் சென்னை பெருநகரில் கொலை,  கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 128 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 32 குற்றவாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 14 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தியும், விற்பனை செய்த 13 குற்றவாளிகள், உணவு பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி, கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்ற 4 குற்றவாளிகள், போக்சோ மற்றும் பாலியல் குற்றத்தில்  ஈடுபட்ட 2  குற்றவாளிகள் என மொத்தம் 194 குற்றவாளிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Crime, thuggery law, arrest
× RELATED போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம்...