சென்னை: பதிவுத்துறையில் தவறு செய்வது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். சென்னை பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சிறப்பு சீராய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் மற்றும் அனைத்து மண்டல துணை பதிவுத்துறை தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சார் பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா ஏற்கனவே உள்ளது. இதை முறையாக அனைத்து இடங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 வருடத்தில் இருந்ததை விட கடந்த 2 மாதத்தில் பெரிய அளவிலான மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். தவறு செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, இந்த துறையை பொறுத்த வரையில் முனைப்போடு செயல்படுத்தி வருகிறோம். சில இடங்களில் சொத்துக்காக பதியும் ஆவணங்களை நேரடியாகவே ஆன்லைனில் செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தும் போது இடைத்தரர்களை தவிர்க்கலாம். போலி பத்திரப்பதிவுகள் நடைபெற்றதை காணமுடிகிறது. அதுபோன்ற செய்தவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறோம். சிலரை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்திருக்கிறோம். யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல மடங்கு தவறுகள் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.