தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவித்து அரசாணை

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பெரிய நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்தது. இதில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் தொழில் நடவடிக்கைகளில் இருந்து மீள்வது மிகவும் சிரமமாக இருந்தது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலும் கொரோனா பாதிப்பால் தொழில்கள் முடங்கியுள்ளன. எனவே, தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவிக்கும் போது சிறு குறு தொழில் நிறுவனங்களை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதனால், பொருளாதாரம் மற்றும் கொரோனா காரணமாக இழப்பை சந்தித்து வந்த சிறு குறு தொழில் நிறுவனங்கள் தற்போது சற்று மீளத் துவங்கியுள்ளன.

இந்தநிலையில், சிறு குறு தொழில்நிறுவனங்களில் பாதிப்பை மேலும் சரிசெய்யும் வகையில் பல்வேறு தளர்வுகள் மற்றும் சலுகைகளை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் ₹20 லட்சத்திற்கும் குறைவான டெண்டரில் சிறு குறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது அவர்களுக்கு வகுக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.அதன்படி, புதிதாக தொழில் தொடங்கிய அல்லது தொழில் தொடங்க உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் அரசு துறையில் டெண்டர் கோரும் போது முன் வைப்பு தொகை வைக்க தேவையில்லை. வருடத்திற்கு குறிப்பிட்ட தொகையை ஈட்டியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதேபோல், அரசு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. டெண்டருக்கான தொகை செலுத்த தேவையில்லை. தமிழ்நாடு அரசின் ‘STARTUP TN’ முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது என அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: