புட்ளூர் அங்காளம்மன் கோயில் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சாலையில் நடந்த வளைகாப்பு

திருவள்ளூர்: புட்ளூர் அங்காளம்மன் கோயிலில், பெண்களுக்கு வளைகாப்பு நடத்த கோயில் நிர்வாகம் மறுத்ததால், உறவினர்கள், கர்ப்பிணிகளை சாலையில் உட்கார வைத்து வளைகாப்பு நடத்தினர்.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் தரிசனத்துக்கு மட்டும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. விழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது.இதைதொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து, அனைத்து மத கோவில்களும் வழிபட அனுமதி அளித்தது. தற்போது, ஆடி மாதம் பிறந்ததையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால்  நேற்று கூட்டம் அலைமோதியது. புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் திருமணமான பெண்கள் அடியெடுத்து வைத்தால் குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், சுகப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகளும், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.அப்போது அவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்த கோரினர். ஆனால், கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கோயில் அருகே சாலையில் வளைகாப்பு நடத்தினர்.

Related Stories: