அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரபுகுமார் (40). இவரது மனைவி விமலா (35). பிரபுகுமார், நேற்று காலை வேலைக்கு சென்றார். பின்னர் விமலா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அந்த நேரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் விமலா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பொதுமக்களின் பிடியில் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று, தீவிரமாக விசாரித்தனர். அதில், திருவள்ளூர் அருகே கடம்பத்தூர், கசவா நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த கருணாபிரபு (36), அவரது மனைவி சௌமியா (36) என தெரிந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், இதேபோல் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் செய்யப்பட்டார்களா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.