சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரசின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நவ்ஜோத் சிங் சித்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை சந்தித்து பேசியதை அடுத்து உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது. சண்டிகரில் பஞ்சாப் பவனில் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றார். அப்போது இருவரும் கருத்து வேறுபாடுகள் களைந்து உரையாடி கொண்டனர். இதை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்து மாநில தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் புதிதாக நியமிக்கப்பட்ட செயல் தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.