பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவு செய்யும் நிலையில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால், பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பாஜ ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உட்கட்சி பூசல் காரணமாக வரும் 26ம் தேதி எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் நேற்று எடியூரப்பா அளித்த பேட்டியில், ‘‘நான் தேசிய கட்சியில் இருப்பவன். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. நானே முதல்வராகவில்லை. கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்ததால் முதல்வராகி உள்ளேன்.