கரீனாவின் ஃபிட்னெஸ் ரகசியம்

நன்றி குங்குமம் தோழி

எப்போதும் சிக்கென்று உடல்வாகு இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெண்களின் விருப்பமாகும். இதற்காக பலர் டயட் என்ற பெயரில் பட்டினி இருக்கிறார்கள். சிலர் உடல் இளைக்க மருத்துவ முறையினை நாடுகிறார்கள். இவை எல்லாம் நம் உடலில் பிற்காலத்தில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்கு புரியவில்லை.

எதையுமே முறையாக ெசய்தால் அதற்கான பலனை அனுபவிக்கலாம் என்கிறார்கள், பாலிவுட் உலகின் ஃபிட்னெஸ் தம்பதிகளான கரினா கபூர் கான் மற்றும் சாய்ப் அலிகான். கடந்த 12 வருடமாக கடைப்பிடித்து வரும் ஃபிட்னெஸ் மந்திரத்தைப் பற்றி மனம் திறக்கிறார் பட்டோடி குடும்ப இளவரசி கரினா கபூர் கான்.

‘‘எல்லாப் பெண்களுக்கும் ஒல்லியாக ஜீரோ சைசில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒல்லியாக மட்டுமே இருப்பது முக்கியமில்லை. ஆனால், அது ஒரு முழுமையான அணுகுமுறையாக இருக்க வேண்டும். ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதை விட ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளவேண்டும்’’ என்ற கரீனா சாதாரண உணவுப் பழக்கவழக்கத்திலும் ஃபிட்டாக இருக்கலாம் என்றார்.

‘‘ஒரு கப் சாதம் மற்றும் பருப்பில் உள்ள புரதச்சத்து வேற எதிலும் கிடைக்காது. அதே சமயம் அந்த உணவினை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். நான் சாப்பிடும் பருப்பில் நெய் சேர்க்காமல் சாப்பிடமாட்டேன். சில சமயம் இரவு நேர உணவு கிச்சடியாக கூட இருக்கும். என்னைப் பொறுத்தவரை கிச்சடி மிகவும் வசதியான உணவு’’ என்றவருக்கு  தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடவில்லை என்றால் தூக்கம் வராதாம்.

‘‘சாயிப் இப்போது 50யை நெருங்குகிறார். வயசாகும் போதுதான் நாம் மிகவும் ஃபிட்டாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் ஃபிட்னெஸ் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார். அதற்கு முதலில் ஃபிட்னெஸ் குறித்த அறிவு அவசியம். நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உணவுப் பழக்கங்கள் குறித்த புத்தகங்கள் பல உள்ளன.

அதில் மிகவும் உன்னதமானதை தேர்வு செய்து படிக்க வேண்டும் அல்லது சிறந்த உணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம். உடல் எடையை குறைக்க பட்டினிதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’’ என்றவர் சாய்பிற்கு தினமும் அவரின் உணவில் அப்பளம் கண்டிப்பாக இருக்கணுமாம். ‘‘சாயிப் தினமும் எண்ணையில் பொரித்த அப்பளம் சாப்பிடுவார்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. ஒரு முறை

ஷூட்டிங் போது, மதிய உணவிற்கு இவர் பிரட் மற்றும் சீஸ் சாப்பிட்டதைப் பார்த்து நடிகை கங்கனா அசந்து போய் விட்டார்.

கல்யாணம், குழந்தை என்று வந்தபோது, நான் கொஞ்சம் எடை கூடி இருந்தேன். என்னுடைய பழைய நிலையை அடைய நான் ஒரு வருஷம் என் உடலுடன் போராடினது எனக்கு மட்டும் தான் தெரியும். நான் சாப்பிடாமல் பட்டினி இருந்ததாகத்தான் பலர் நினைச்சாங்க. அப்படி எல்லாம் நான் பெரிய அளவில் என்னை வருத்திக் கொள்ளவில்லை.

அளவான சாப்பாடு, சரியான நேரத்தில் தூக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சி மட்டுமே நான் கடைப்பிடிச்சேன். எந்த இரவு நான் சீக்கிரம் தூங்குறேனோ மறுநாள் நான் புத்துணர்ச்சியாகவும், ஒரு இஞ்ச் எடை குறைந்துவிட்டது போல் உணர்வேன்’’ என்ற கரீனா, தங்களின் மகன் தைமூரின் நேரத்திற்கு ஏற்ப இவர்களின் நேரத்தையும் மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர்.

‘‘நாங்க இப்போது அவனுடைய நேரத்தைதான் பின்பற்றுகிறோம். அதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு. அவன் தூங்கும் நேரத்தில் நாங்க விழித்திருக்கிறோம். அவனுக்கு வீட்டுச் சாப்பாடுதான் பிடிக்கும். வெளியே பார்ட்டிகளுக்கு சென்றாலும், அங்கு அவனை சாப்பிட அனுமதிப்பதில்லை. அது தவறுதான். இருந்தாலும் சிறிய வயதில் அவனுடைய ஆரோக்கியத்திற்கு அடித்தளம் போட்டுவிட்டால், அவன் வளர்ந்த பிறகு அதுவே அவனை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

இட்லி, தோசை, வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவான். அவனுடைய உணவு திட்டத்தை மாதம் ஒருமுறை நான் மாற்றி அமைப்பேன். இதன் மூலம் அவன் எல்லா விதமான உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட பழகுவான்’’ என்று தங்கள் குடும்பத்தின் ஃபிட்னெஸ் சீக்ரெட்டுகளை பகிர்ந்துகொண்டார் நடிகை கரீனா கபூர் கான்.

ஷம்ரிதி

Related Stories: