கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* மூக்குக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டை துருவி வெங்காயத்துடன் சேர்த்து

வதக்கினால் சுவை அதிகமாகும்.

* கடுக்காய் தோலை மூன்று பங்காக்கி ஒரு பங்கு தோலுடன் ஒரு ஏலக்காயைச் சேர்த்து வாயில் மென்று அடக்கிக்கொண்டால் விக்கல், குமட்டல், வாந்தி நிற்கும்.

* பொன்னாங்கண்ணிக்கீரையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பல் சம்பந்தப்பட்ட வியாதிகள் விரைவில் குணமாகும்.

* முடக்கத்தான் கீரையை ஒரு பிடி அரைத்து தோசை மாவில் சேர்த்து செய்தால் சுவையாக இருப்பதுடன், கை, கால்களில் ஏற்படும் மூட்டுவலிகளும் போய்விடும்.

* நார்த்தங்காயில் (எலுமிச்சை) சாதம் செய்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

* தேங்காய் சட்னி வெள்ளை வெளேர் என்றிருக்க பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து புளிக்குப் பதிலாக எலுமிச்சம் சாரை சேர்த்துக்கொண்டால் சட்னி வெண்மையாக இருக்கும்.

* ரசம், கூட்டு, பொரித்த கூட்டு ஆகியவற்றிற்கு இறக்கியபின்தான் தாளித்துக்கொட்ட வேண்டும். சாம்பாருக்கு முதலிலேயே தாளித்துக்கொட்டலாம்.

* அவியல் சுவையாக இருக்க தயிரை இறக்கியபின்தான் சேர்க்க வேண்டும். இறக்கி வைத்தபின் பச்சை தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்தால் வாசனை நன்றாக இருக்கும்.

* வெண்ணெய் எடுக்கும்போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் ஏடு கெட்டியாக எளிதில் திரண்டு வந்துவிடும்.

* எண்ணெய்களுடன் சிறிது மிளகைப்போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.

* பொங்கல், உப்புமா இவற்றைக் குழைவாகச் செய்தால் நெய், எண்ணெய் தேவைப்படாது. மேலாக சிறிது எண்ணெய் விட்டாலே நிறைய நெய் விட்டுக் கிளறியதுபோல் இருக்கும்.

* எண்ணெய் காய்ச்சும்போது பொங்காமல் இருக்க அதில் ஒரு வாழைப்பழத் தோலையோ ஒரு சிறு உருண்டை புளியையோ போட்டு விட்டால் போதும். காய்ந்த பிறகு இவற்றை அகற்றி விட்டு, தேவைப்பட்டதைப் பொரித்தெடுத்துக் கொள்ளலாம்.

* பாலில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொதிக்க வைத்து வடிகட்டினால் பனீர் கிடைக்கும். அதை தயாரித்தவுடன் மீதமுள்ள தண்ணீர் சத்து நிறைந்தது. அதைக்கீழே கொட்டாமல், சூப், குருமா போன்றவற்றில் சேர்க்கலாம். சப்பாத்தி பிசையவும் பயன்படுத்தலாம்.

* வெங்காயம் நறுக்கிய கைகளை காப்பித்தூளை உபயோகித்து கழுவ வெங்காய வாடை போகும்.

- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

* தேனில் நான்கு நெல்மணிகளைக் கழுவி போட்டு வைத்தால் தேன் அதிக நாட்கள் கெடாமலிருக்கும்.

* சாதம் கொதிக்கும்போது இரண்டு துளி எலுமிச்சை பழச்சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

* சாம்பாரை நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயும், கறிவேப்பிலையும் போட்டு மூடி வைத்தால், சாம்பார் மணமாக இருக்கும்.

* தினமும் புளியைக் கரைத்தபின் சக்கையை வெயிலில் உலர்த்தி குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் பொடி செய்து காப்பர், பித்தளைப் பாத்திரங்களை துலக்கினால் பாத்திரம் பளபளக்கும்.

* மண்பானையில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு, தயிர் போன்றவற்றை வைத்தால் ஃப்ரிட்ஜில் வைத்ததுபோல நீண்டநேரம் புளிப்பேறாமல் இருக்கும்.

* மாங்காயைத் தோல் சீவி துருவி எந்த பொரித்த குழம்பானாலும் கடைசியில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க குழம்பு சூப்பராக இருக்கும்.

* பிரட் பக்கோடா செய்வதற்கு பிரட் துண்டுகளை பாலில் முக்கி எடுத்து, பிறகு மாவில் தோய்த்துப் போட்டால் சுவையாக இருக்கும்.

* தோசை மாவு நீர்த்துவிட்டால் அதில் சோள மாவு மற்றும் வெறும் வாணலியில் வறுத்த மைதா மாவினை சேர்த்து கரைத்து மாவில் ேசர்த்தால் மாவு கெட்டியாகும். சுவையும் மாறாது.

- விஜயலட்சுமி, மதுரை

Related Stories: