×

தண்ணீரை பாதுகாக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி   


*கோடைகாலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் தண்ணீரை சிக்கனமாக நாம் உபயோகிக்க வேண்டும்.

* தண்ணீரைப் பிடித்து வைத்து பாத்திரங்கள் கழுவினால் தேவை குறையும்.

* துணிகளைத் துவைக்கும்போதும், துணிகளை அலசும்போதும் குழாய் தண்ணீரை திறந்துவிட்டுக்கொண்டே செய்யாமல் அளவோடு பிடித்து அலசிய பிறகு அந்த நீரை கழிவறை சுத்தம் செய்யவோ, செடிகளுக்கோ பயன்படுத்தலாம்.

* வாஷிங் மிஷினில் துவைக்கும் போது, தண்ணீர் அதிகம் செலவாகும். முடிந்த வரை கைகளால் துணிகளை துவைக்கலாம். அல்லது தண்ணீரின் அளவைக் குறைத்து மிஷினை ஓடவிடுங்கள்.

* செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது, பைப்பை பிடித்தபடி நிற்காமல், ஒரு வாளியில் பிடித்து தெளித்துவிட்டால் தண்ணீர் மிச்சமாகும்.

* பல் துலக்கும்போது வாஷ்பேஷின் குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டே பல் துலக்கினால் தண்ணீர் நிறைய வீணாகும். அதைத் தவிர்த்து ஒரு கப்பில் பிடித்து பல் துலக்கலாம். குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம்.

*ஷவரில் ஒருவர் குளிக்க நிறைய தண்ணீர் செலவாகும். அதனால் பக்கெட்டில் பிடித்து குளித்தால் குறைவாக செலவாகும்.

* ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து நிலத்தடி நீரை காப்பாற்றலாம்.

* நீர் சொட்டிக்கொண்டே இருக்கும் பழைய பைப்புகளை உடனே மாற்ற வேண்டும்.

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

உங்கள் கண்களை கவனியுங்கள்

* கண்கள் குளிர்ச்சி பெற பசு நெய் சாப்பிடவும்.

* புளியம்பூவை அரைத்து கண்களைச்சுற்றி பற்று போட்டால் கண்வலி தீரும்.

* கண்வலி, கண் அரிப்பு நீங்க வில்வ மரத்தின் தளிர் இலைகளை நன்றாக வதக்கி கண்ணை மூடிக்கொண்டு அதன்மேல் ஒத்தடம் கொடுக்கலாம்.

* கண் எரிச்சல் நீங்க அடிக்கடி அரைக்கீரை சாப்பிடவும்.

*தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் சரியாகும்.

* கண் பார்வை தெளிவடைய பச்சைப் பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்றுவிட்டு பால் பருகிவர கண் பார்வை
தெளிவடையும்.

*கண் எரிச்சல், நீர் வடிதல் பிரச்னைக்கு நாவல்பழம் சாப்பிடலாம்.

* கண் ஒளி புத்துணர்ச்சி பெற தூதுவளைக்காய், தூதுவளை வத்தல் சாப்பிடலாம்.

* கண்கள் சிவப்பாக மாறிவிட்டதை குணமாக்க புளியமரத்தின் இலையை ஒரு மெல்லிய துணியில் வைத்து கண்களின் மேல் வைத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் குணமாகும்.

* கண் பார்வை கூர்மை அடைய தான்றிக்காய் தோலை உரித்து பொடி செய்து கால் கரண்டி தேனில் குழைத்து சாப்பிடலாம்.

- நீலாமணி கோவிந்தராஜன், பள்ளிக்கரணை.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!