ஈரோட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1000 கோடி ஜவுளிகள் தேக்கம்: வியாபாரிகள் கவலை

ஈரோடு: கொரோனா  ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் 50 நாட்களில் ரூ.1000 கோடி மதிப்பிலான ஜவுளிகள்  தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு  கிளாத் மெர்ச்சன்ஸ்ட் அசோசியேசன் நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோட்டில்  தயாரிக்கப்படும் ஜவுளிகள் மொத்த வியாபாரமாக தமிழகம் மற்றும் இந்தியாவில்  அனைத்து மாநிலத்துக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம். கடந்த 50  நாட்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் கடுமையாக முடங்கிவிட்டது.  ஜவுளித்தொழிலை நம்பி உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள்,  மடித்தொழிலாளர்கள், சுமை பணியாளர்கள், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் என பல  லட்சம் பேர் பாதித்துள்ளனர்.

தமிழகத்தில்  தளர்வு வழங்காவிட்டாலும், வடமாநிலங்களில் மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர்,  சூரத் என பல இடங்களில் இத்தொழிலுக்கு முழு தளர்வு வழங்கி, உற்பத்தி,  ஏற்றுமதி நடக்கிறது. இதனால் ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு வர வேண்டிய  ஆர்டர்களில்  50 சதவீதத்துக்கு மேலான ஆர்டரை வடமாநில வியாபாரிகள் கைப்பற்றி  வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்டனர். உற்பத்தி செய்தவற்றை விற்பனை செய்ய முடியாததால் குடோன்களில் மட்டும் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேங்கி கிடக்கிறது. எனவே இத்தொழிலுக்கு முழு தளர்வு வழங்க அரசு முன்வர  வேண்டும். மேலும் வங்கி கடனுக்கு மூன்று மாத வட்டி தள்ளுபடி, அசலை செலுத்த  கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: