×

தருமபுரியில் கொடூரம்!: ரூ. 2.50 கோடி சொத்துக்காக வயதான தாய், தந்தையை கொன்று நாடகமாடிய மகன் கைது..!!

தருமபுரி: தருமபுரி அருகே இரண்டரை கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க பெற்றோரை கழுத்து நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். உடன் பிறந்த தங்கைகளுக்கு சொத்தில் பாகம் செல்லாமல் இருக்கவே இந்த கொடூர கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 


தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் 85 வயது துரைசாமி. இவர் தனது மனைவி 75 வயது கோசலையுடன் தனியாக வசித்து வந்தார். அவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை பராமரித்துக்கொண்டு அந்த நிலத்தில் உள்ள வீட்டிலேயே தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தனர். 


இந்த நிலையில் துரைசாமி அவரது மனைவி கோசலை ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் பூச்சிமருந்து கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக துரைசாமியின் 55 வயது மகன் ஆனந்தன் போலீசிடம் தெரிவித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


பிரேத பரிசோதனையில் துரைசாமியும் அவரது மனைவி கோசலையும் தற்கொலை செய்யவில்லை. இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களின் கழுத்து எலும்பு முறிந்தும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் மரணம் நிகழ்ந்திருப்பது உறுதியானது.. இதுகுறித்து துரைசாமியின் மகன் ஆனந்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 


அப்போது தாய், தந்தையரை ஆனந்தன் கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. ஆனந்தன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தந்தையின் பெயரில் உள்ள சொத்துக்களில் சகோதரிகளுக்கு பாகம் பிரிப்பதை விரும்பவில்லை. முழு சொத்தும் எனக்கே வர வேண்டும் என கருதினேன். 


தாய், தந்தை உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது என்று கருதியதால் எனது மகன்கள் உதவியுடன் இருவரையும் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசிடம் தெரிவித்திருக்கிறார். போலீசிடம் பிடிபட்டுவிடாமல் இருக்க பூச்சி மருந்தை கலந்து வாயில் ஊற்றிவிட்டு மருந்து குடித்து பெற்றோர் இறந்துவிட்டதை போன்று நாடகமாடியதாகவும் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். 


சொத்தில் பெண்களுக்கு சமபங்கு உண்டு என்கிறது சட்டம். அதனை மீறுகின்ற வகையிலும், சொத்தில் உடன்பிறந்த தங்கைகளுக்கு பாகம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும் தனது பெற்றோரை அவரது மகனே தீர்த்துக்கட்டிய சம்பவம் தருமபுரி பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.



Tags : Dhāmapuram , Dharmapuri, property, mother, father, murder, son arrested
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை