சென்னை: வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம் தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 செ.மீ மழையும், சோளிங்கர் மற்றும் திருவாலங்காடு ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் கிழக்கு இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று சூறாவளி காற்றாக வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.