தேர்தல் நடத்துவது, மாநில அந்தஸ்து குறித்து காஷ்மீர் தலைவர்களுடன் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது, மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் மோடி இன்று காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் வரும் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.  இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என காஷ்மீரின் முக்கிய கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது. காஷ்மீரில் 2019 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முந்தையை நிலையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார். இந்த கோரிக்கைகளும் இன்றைய ஆலோசனையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடப்பதால் பொய் தகவல்கள் பரவாமல் இருக்க காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் இன்று முடக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: