தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழி முறைகள்-வேளாண் அதிகாரி ஆலோசனை

புதுக்கோட்டை : தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர்(பொ).பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.தென்னை மற்றும் வாழை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் தாக்குதல்; நமது மாவட்டத்தில் கடந்த வருடம் இதே பருவத்தில் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இதன் தாக்குதல் தென்படுகிறது. எனவே, விவசாயிகள் இவ்வெள்ளை ஈக்களை பற்றி தெரிந்து கொள்வதோடு ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம்.

சுருள் வெள்ளை ஈக்கள் :

வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள், மெழுகுப்பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20-30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தாக்குதல் அறிகுறிகள் :குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து காணப்படும்.​வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களைத் தவிர, வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது. தற்பொழுது இதன் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. எனவே, கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்திடலாம்.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடவடிக்கை முறைகள்:

மஞ்சள் நிறமானது, வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (நீளம் 5 அடி அகலம் 11ஃ2 அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் , 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணிவரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.

கிரைசோபெர்லா இரைவிழுங்கிகள், தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரைவிழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும்.

அதிக அளவு பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.

உழவன் செயலி

விவசாயிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியல் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயியின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பினையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்கமையத்தினை அணுகிடலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: