சென்னை: பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். பப்ஜி விளையாட்டு மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளை தனது யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் மதன்பேசி வந்தார். ஒன்றிய அரசால் தடை செய்யப்பட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடியதாகவும் மதன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த 100-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து யூடியூப் சேனல் நடத்தி வந்த மதனை தேடிவந்தனர்.
பப்ஜி மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலின் அட்மினாக செயல்பட்டு வந்த கிருத்தகா கைது செய்யப்பட்டார். பப்ஜி விளையாட்டின் போது பலரிடம் பணம் வசூலித்ததாகவும் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. தருமபுரியில் பதுங்கியிருந்த மதன் கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மதனின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.4 கோடி பணத்தை முடக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ், மதன் வீட்டில் இருந்த 2 விலை உயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்தது. டாக்சிக் மதன் 18+ என்ற பெயரில் மதன் நடத்தி வந்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து பப்ஜி விளையாட்டுக்கு பயன்படுத்திய கணினியையும் பறிமுதல் செய்து ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் 2 நாள் காவலில் எடுத்துள்ள பப்ஜி மதனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து சைபர் கிரைம் அளித்ததில் விசாரணை நடக்கிறது. ஆபாச பேச்சு, ஆதரவற்றோருக்கு உதவுவதாக கூறி மோசடி உள்ளிட்டவை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.