திருப்பத்தூர் மாவட்டத்தில் தக்காளி கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-கலெக்டர் தகவல்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் தக்காளி கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் தோட்டக்கலை, பொறியியல் பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆலோசனை நடத்தினார்.  

இதில், வேளாண் துறை, கால்நடை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் வணிக துறையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர்   கேட்டறிந்தார். அப்போது, அவர் பேசியதாவது:

அலுவலர்கள் பற்றாக்குறை குறித்து அறிக்கை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். விரைவில் புதிய அலுவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் குறைந்த செலவில் லாபம் ஈட்டும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அரசின் மானியம், கடன் உதவி பொருட்கள் குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுகளை வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

6 வட்டாரங்களில் ஒரு விவசாயி தேர்ந்தெடுத்து அதிகப்படியான விளைச்சலை பெறும் வகையில் நவீன வேளாண் செயல்முறை பயிற்சி வழங்க வேண்டும். நவீன கருவிகளை விவசாயிகளின் மானியத்துடன் பெற்றிட போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் போதிய பயிற்சி வழங்க வேண்டும். உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் அதிகப்படியான விவசாயிகள் பயன்பெறும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தக்காளி கூழ் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை இப்பகுதியில் அமைக்க மற்ற மாநிலங்களில் உள்ள அலுவலர்கள் அறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருப்பத்தூர், ஆம்பூர், சர்க்கரை ஆலைகள் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்தும், ஆலங்காயம் பகுதியில் பட்டு உற்பத்தி தொழில் செய்வது குறித்தும், கால்நடைகளுக்கு கால அளவில் போடப்படும் தடுப்பூசி முகாம்கள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர், துணை இயக்குனர் வேளாண் வணிகம் செல்வராஜ், உதவி இயக்குனர் கால்நடை நாசர், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், உதவி இயக்குனர் தோட்டக்கலைத்துறை கயல்விழி, கரும்பு அலுவலர் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: