மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் தீர்வு திட்டத்தை செயல்படுத்த ஜலான் கல்ராக் கூட்டமைப்பிற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 2008ம் ஆண்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பல வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று செயல்பட்டு வந்தது. கடனை திரும்ப செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட ஜெட் ஏர்வேஸ் 2019 ஏப்ரல் முதல் விமான சேவையை நிறுத்தியது. இதையடுத்து, எஸ்பிஐ தலைமையில் கடன் கொடுத்த வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதிகள் அமர்வு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தவும், 90 நாட்களில் திவால் நடவடிக்கைகளை முடிக்கவும் உத்தரவிட்டது.