சென்னை: ஐதராபாத்தில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 3,10,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் நேற்று விமானத்தில் சென்னை வந்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு வெற்றி கண்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் முழுமூச்சாக களம் இறங்கி உள்ளது. அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை போட்டு கொள்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு அதிகளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்றும் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.