சென்னையை தொடர்ந்து முதுகுளத்தூரில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது; வலைத்தளத்தில் ஆடியோ வெளியானதால் நடவடிக்கை

சாயல்குடி: முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம், ஆபாசமாக பேசிய ஆசிரியரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், தேரிருவேலி மும்முனை சந்திப்பில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் முதுகுளத்தூரை சேர்ந்த ஹபீப் முகம்மது (36), அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார். இதனால் அனைத்து மாணவிகளின் போன் நம்பர்களையும் வைத்துக்கொண்டு, கடந்த ஓராண்டிற்கு மேலாக தனித்தனியாக பேசி வந்துள்ளார். அப்போது வரம்பு மீறி, மாணவிகளிடம் பாலியல் ஆசைகளை தூண்டும்விதமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியே சொன்னால் பெயிலாக்கி விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். சமீபத்தில் பாலியல் வழக்கில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து விழிப்படைந்த மாணவி ஒருவர், பெற்றோரிடம் ஆசிரியர் ஹபீப் முகம்மதுவின் அத்துமீறல் பேச்சு குறித்து தெரிவித்துள்ளார்.  மேலும், மாணவியுடன் ஆசிரியர் பேசும், ஆடியோ சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மாணவி ஒருவரிடம் பேசும் ஆசிரியர் ஹபீப் முகம்மது, ‘‘பெண்கள் ஆசையை அடக்கி வைக்கக்கூடாது. உங்களுக்கு ஏதாச்சும் தோணுச்சுனா, என்னிடம் சொல்லுங்க. ஆண்களுக்கு ஆசை வந்தால் வெளிப்படுத்தி விடுவோம். பெண்களால் அது முடியாது. அப்படி உனக்கு ஆசை இருந்தால் என்னிடம் சொல்.

புத்தகத்தை எடுத்துக்கொண்டு எனது வீட்டிற்கு வரமுடியுமா’’ என்கிறார். இவ்வாறு பாலியல் வன்முறையை தூண்டும் விதமாக பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஒரு மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், முதுகுளத்தூர் போலீசார், ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் அவரது செல்போன்களை ஆய்வு செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: