கடனை திரும்ப கேட்டு நிதி நிறுவனம் டார்ச்சர் வீட்டு மாடியில் இருந்து குதித்து ஓட்டல் உரிமையாளர் தாய் தற்கொலை: தஞ்சை அருகே பரிதாபம்

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாடு அய்யப்பன் கோயில் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் அய்யப்பன் (28). ஓட்டல் நடத்தி வரும் இவர், ஓட்டல் விரிவாக்கத்துக்காக 2019ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் மாதம் ₹40 ஆயிரம் வீதம் திருப்பி செலுத்துவதாக கூறி ₹25 லட்சம் கடனாக பெற்றிருந்தார். இந்நிலையில், கொரோனா முதல் அலை ஊரடங்கால் நிதி நிறுவனத்துக்கு முறையாக கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்தனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அய்யப்பன் புகார் அளித்தார். போலீசார் தலையிட்டு அவரிடம் மாதந்தோறும் ₹10 ஆயிரம் வசூலித்து கொள்ள வேண்டும் என கூறினர்.

இதையடுத்து நிறுநிறுவனத்திற்கு மாதந்தோறும் பணம் திருப்பி செலுத்தி வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையில் தொழில் முடங்கியதால் அய்யப்பன் ஓட்டலை பூட்டிவிட்டார். இதனால் நிதி நிறுவனத்துக்கு கடன் தொகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்ட அய்யப்பன், சொத்துகளை விற்று திருப்பி செலுத்துவதாக இருந்தார். இந்நிலையில், நிதி நிறுவனத்தினர் வீட்டிற்கு வந்து மிரட்ட தொடங்கினர். இதையடுத்து கடந்த 11ம் தேதி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு அய்யப்பன் புகார் மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவில், நிதி நிறுவனத்தினர் பணத்தை தராததால் வீட்டுக்கே வந்து மிரட்டுவதாகவும், இதனால் குடும்பத்தினர் மனஉளைச்சலில் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வீட்டிற்கு வந்து நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த அய்யப்பனின் தாய் தமிழரசி (50) கடந்த 18ம் தேதி வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த தமிழரசி, நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: