போலீஸ்காரரை வெட்டிக்கொன்ற ரவுடி 6 மணி நேரத்தில் கைது

நாகர்கோவில் : நாகர்கோவிலில் புறா தகராறில் ேபாலீஸ்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.  நாகர்கோவில் கோட்டார் கலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீசரவணன் (32). நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12 வது பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக இருந்த இவர், கடந்த சில வருடங்களாக பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இவரது மனைவி சுஜிதா (32). காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு ஸ்ரீவேல் (11) என்ற மகனும், ஸ்ரீதா (10) என்ற மகளும் உள்ளனர். ஸ்ரீசரவணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (26) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித்குமார் கத்தியால் ஸ்ரீசரவணனை குத்தினார். இதில் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய ஸ்ரீசரவணன், கோட்டார் போலீசில் புகார் அளிக்க நண்பர் விக்ரமுடன் சென்றுள்ளார்.

அப்போது கோயில் அருகே மறைந்திருந்த ரஞ்சித்குமார் மீண்டும் அரிவாளை எடுத்து வந்து  ஸ்ரீசரவணனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் அதேஇடத்தில் இறந்தார். இதை தடுக்க முயன்ற விக்ரமுக்கும் வெட்டு விழுந்தது.  இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குபதிந்து, ரஞ்சித்குமாரை தேடி வந்தனர். நள்ளிரவில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ரஞ்சித்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ரஞ்சித்குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. போலீஸ் ரவுடி பட்டியலிலும் இருந்து வந்தார். கொலை நடந்த 6 மணி நேரத்தில் ரவுடியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பத்ரி நாராயணன் பாராட்டினார்.  கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஸ்ரீசரவணனுக்கும், ரஞ்சித்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் ஸ்ரீசரவணனின் மனைவியை, ரஞ்சித்குமார் தவறாக பேசி உள்ளார். இதில் இருவரும் மோதிக்கொண்டனர். ஸ்ரீசரவணனின் வீட்டில் இருந்த புறாவை, தனது புறா என கூறி ரஞ்சித்குமார் பிடித்து சென்றுள்ளார். இதுதொடர்பாகவும் தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளது என்றனர்.

Related Stories: